நாகர்கோவில், ஆக.8: குமரி மாவட்டத்தில் 1780 இடங்களில் ெகாரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்ற நிலையில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் நேற்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 445 குழுக்கள் 1780-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 82 சதவீதம் பேரும், 2வது தவணை 71 சதவீதம் பேரும், மூன்றாம் தவணை 11 சதவீதம் பேரும் செலுத்தியிருந்த நிலையில் இந்த தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்றாவது டோஸ் தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 15ம் தேதி முதல் 75 நாட்கள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் முதல் தவணையும், 2ம் தவணை மற்றும் இலவசமாக மூன்றாம் தவணை தடுப்பூசி பெற தகுதி படைத்தோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டு கொரோனா நான்காம் அலையை வெற்றிகரமாக கடந்து வர முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தநிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில் ெபாதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தினர். இரண்டாவது தவணை செலுத்தி 6 மாதங்கள் ஆன அனைவரும் இலவசமான மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திட வாய்ப்பு கிடைத்தது. மேலும் வெளிநாடு செல்ல விரும்புவோர் இரண்டாவது தவணை செலுத்தி 3 மாதங்கள் ஆகியிருந்தால் கூட 3வது தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்திக் கொள்ள முடியும் என்ற வாய்ப்பும் வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை வரை மொத்தம் 30 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தனர்.