×

அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடிவு நெல்லை மாநகரில் அதிக விபத்து பகுதியாக 23 இடங்கள் தேர்வு ஆக.10ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் ஆய்வு

நெல்லை, ஆக. 6: நெல்லை மாநகரில் அதிக அளவில் விபத்து நடைபெறும் பகுதியாக  23 இடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பல்துறை ஊழியர்களுடன் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுக்கள், இதுகுறித்து முழுமையாக ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளன. முதற்கட்டமாக நெல்லையில் 4 இடங்களில் நேற்று துவங்கிய ஆய்வு வரும் 10ம் தேதி வரை நடக்கிறது.

 நெல்லை மாநகரில் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு பலியானோரின் எண்ணிக்கையும் உயரத் துவங்கியுள்ளது. கடந்தாண்டு நெல்லை மாநகர பகுதியில் நடந்த விபத்துக்களில் மட்டும் 76 பேர் இறந்துள்ளனர். 359 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்தாண்டைப் பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் வரை 56 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர். எனவே அடிக்கடி விபத்துக்கள் நடந்த இடங்களை கண்டறிந்து, அதில் பல்துறை ஊழியர்கள் அடங்கிய குழு மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.

 விபத்து அடிக்கடி நடக்கும் இடங்களில் குறுகிய சாலைகள், சிக்னல் பற்றாக்குறை, வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு, அதிவேகம் உள்ளிட்ட முக்கிய காரணங்களை சுட்டிக்காட்டி இக்குழு அறிக்கை தயாரிக்க உள்ளது. விபத்து குறித்து ஆய்வு நடத்த காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை சார்பில் விஏஓக்கள், மாநகராட்சி சார்பில் உதவி பொறியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை ஆய்வாளர்கள், மருத்துவ துறை சார்பில் 108 குழுவினர், அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஆலோசகர்களை உள்ளடக்கிய சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த சிறப்புக்குழுவினர் நேற்று முதல் தங்களது களப்பணியைத் துவக்கினர். கன்னியாகுமரி- மதுரை நான்குவழிச்சாலையில் நெல்லை மாநகர பகுதிக்குள் மட்டும் 8 இடங்கள் அதிக விபத்து நடக்கும் பகுதியாக கண்டறியப்பட்ட நிலையில் இவற்றில் 4 இடங்களை இக்குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். காலை 9.30 மணி முதல் 11 மணி வரை 4 வழிச்சாலையில் பொட்டல் சந்திப்பிலும், 11 மணி முதல் 1 மணி வரை கீழநத்தம் சந்திப்பிலும், பிற்பகல் 2.30 மணி முதல் 5 மணி வரை சீனிவாச நகர் சந்திப்பிலும், கேடிசி நகர் சந்திப்பிலும் ஆய்வு நடத்தினர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில் இக்குழுவினர் ஒவ்வொரு இடங்களிலும் செல்லும் 4 சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை கணக்கெடுத்தனர். தொடர்ந்து விபத்து நிகழ்வதற்கான காரணங்கள் குறித்தும் கண்டறிந்தனர்.

 இக்குழுவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர்(பொ) தனலட்சுமி, எஸ்ஐ நாராயணன், காவல்துறை மகேஸ்வரி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராமசாமி, நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் செய்யது இப்ராகிம் ரிபாய், விஏஓ முத்துலட்சுமி, 108 ஆம்புலன்ஸ் சேவை சந்திரசேகர், வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் கல்லூரி உதவிப் பேராசிரியர் சுமில்குமரன் மற்றும் 4 மாணவர்கள் அடங்கிய குழுவினர் இடம்பெற்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இக்குழுவினர் தொடர்ந்து இன்று நான்கு வழிச்சாலையில் மீதமுள்ள இடங்களில் விபத்து குறித்தான ஆய்வு நடத்த உள்ளனர். வரும் 10ம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டபிறகு இதுகுறித்த அறிக்கையை தயாரித்து அரசுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Nellie ,
× RELATED தேர்தல் பரப்புரைக்காக நெல்லை...