×

5 இடங்களில் போக்குவரத்து துண்டிப்பு

இடைப்பாடி, ஆக.6: இடைப்பாடி அருகே வெள்ளம் சூழ்ந்து நிற்பதால், 5 இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வருதால், இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி, நெருஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணை வழியாக தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் கரையோர பகுதியில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாவிதன்குட்டை பகுதியில் இருந்து கோனேரிப்பட்டி- பூலாம்பட்டி செல்லும் சாலையில் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு, சங்ககிரி, தேவூர், அரசிராமணி, ராசிபுரம், மகுடஞ்சாவடி, வேப்பமரத்துப்பட்டி ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்கள் தண்ணீர் புகுந்ததால் மோட்டர்கள் செயல்படாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. கோனேரிப்பட்டி நீர்மின் கதவணையிலிருந்து கோம்புக்காடு பகுதியில் உள்ள சாலை உள்பட 5 இடங்களில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஈரோடு மாவட்டம் இடையான விசைப்படகு போக்குவரத்தும், நேற்றுடன் 4வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள், தண்ணீரில் மூழ்கியுள்ளன. கொட்டாயூர் படித்துறையில் பெரியாண்டிச்சி கோயில், பிள்ளையார் கோயில், காவிரிப்பட்டி அக்ரஹார ஊராட்சி புல்லா கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள கோயில்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் தூண்டில் போட்டும், வலை விரித்தும் மக்கள் மீன்களை பிடித்து வருகின்றனர். இப்பகுதிகளில் பூலாம்பட்டி, தேவூர் பேரூராட்சி நிர்வாகம், வருவாய் துறையினர், ஊராட்சி நிர்வாகம், காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கரையோரங்களில் செல்பி எடுப்பவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது