×

கொல்லிமலையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேந்தமங்கலம், ஆக.6: தொடர் மழையால், கொல்லிமலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரோட்டில் மரம் முறிந்து விழுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கொல்லிமலையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறியுள்ளது. நண்பகல் வேளையிலும், ஜில்லென்ற குளிர்ந்த காற்று வீசுகிறது. மண்ணில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் குளிர் வாட்டி எடுக்கிறது.

தொடர் மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி வரை குளிர் நீடிப்பதால், கூலி வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொடர் மலையின் காரணமாக, மிளகு செடியில் இருந்த பூக்கள் அனைத்தும் கொட்டி விட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழைக்கு. செம்மேடு பாலசுப்பிரமணியன் கோயில் அருகே ராட்சத மரம் வேரோடு சாய்ந்து, மின் பாதையின் மீது விழுந்து ரோட்டில் சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலின்பேரில், திண்ணனூர் நாடு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதையடுத்து, மின்சப்ளை சீர்செய்யப்பட்டது. மீண்டும் போக்குவரத்து
துவங்கியது.

அருவிகளில் குளிக்க தடை :கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. வனப்பகுதியில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகளும் உருவாகியுள்ளது. இதனிடையே, ஆடிப்பெருக்கையொட்டி அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனால், கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், நேற்று முன்தினமும், கொல்லிமலையில் பலத்த மழை கொட்டியது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதையடுத்து, அருவிகளில் குளிக்க தடையை நீடித்து, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கொல்லிமலைக்கு சுற்றுலா வருவோர், அடிவாரப் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் குளித்து விட்டு சென்றனர்.

நிவாரண முகாமில்
உள்ளவர்களுக்கு உணவுபள்ளிபாளையம், ஆக.6: பள்ளிபாளையம் காவிரி ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், கரையோரம் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மக்கள், செங்குந்தர் ஓம்காளியம்மன் கோயில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர். முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு நேற்று காலை தேநீர், பன், காலை உணவு ஆகியவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மது விற்ற 8 பேர் கைது