×

காங்கயம் பகுதியில் சாரல் மழை தேங்காய் உலர் களங்களில் பணிகள் பாதிப்பு

காங்கயம்: காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழையுடன், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் தேங்காய் உலர் களங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை அமைத்துள்ளனர்.
தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடந்து வருகிறது. தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடப்பதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்த பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்படும்.
இந்நிலையில், காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரத்தில் பகலில் வெயில் அடித்தது. மாலை, இரவு நேரத்தில் மழையும் பெய்தது. இதனால், பணிகள் பாதிக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சாரல் மழை பெய்தது. இதனால், பகல் முழுவதும் குளிர் காற்று வீசியது. தொடர்ந்து அவ்வப்போது விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணி பாதித்தது. ஏற்கனவே, உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாலின் கொண்டு மூடி வைக்கப்பட்டது. இதனால் நேற்று காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

Tags : Kanganam ,
× RELATED கூத்துப்பட்டறை நடிகரின் கங்கணம்