×

ஆடிப்பெருக்கு விழா: காவிரியில் நீராட தடை மாவட்டத்தில் ஆற்றங்கரைகள் வெறிச்சோடின

ஈரோடு, ஆக. 4: ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆடிப்பெருக்கன்று எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் காவிரி, பவானி ஆற்றங்கரைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. தமிழில் வரும் ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு விழாவாக தமிழக மக்களால் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். ஆடிப்பெருக்கன்று புனித நதிகளில் நீராடி முளைப்பாரி விட்டு வழிபட்டால் விவசாயம் செழிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம். அதேபோல், புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீராடி, திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதிய தாலி சரடினை கட்டி கொண்டால் மண வாழ்க்கை இன்புறும் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு, பவானி ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடி, நதி தெய்வங்களை வணங்கி சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடி நீருக்கு மேல் திறந்து விடப்பட்டுள்ளதாலும், பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் ஆறுகளில் நீராடவும், சடங்குகள் மேற்கொள்ளவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், ஆடிப்பெருக்கு விழா அன்று எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் ஈரோடு காவிரி ஆற்றங்கரை, பவானி கூடுதுறை போன்ற பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
மக்கள் ஏமாற்றம்: ஆற்றங்கரையில் நீராட தடை என ஈரோடு காவிரி ஆற்றங்கரை நுழைவு வாயிலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்துள்ளனர். இதனை அறியாமல் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் காவிரி, பவானி ஆற்றங்கரைக்கு நீராட வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால், ஆடிப்பெருக்கன்று நீராட முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ஒரு சிலர் காலிங்கராயன் வாய்க்காலில் நீராடி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில்களில் குவிந்த பக்தர்கள்:ஆடிப்பெருக்கையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள பெரியமாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோயில், கொங்காலம்மன் கோயில், ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோயில், திண்டல் முருகன் உள்ளிட்ட கோயில்களில் நேற்று அதிகாலையே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் அவர்களது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தி சென்றனா். இதனால், அனைத்து கோயில்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Adiperku festival ,Cauvery ,
× RELATED காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத்...