ஈரோடு, ஆக. 3: ஈரோடு மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட 13வது மாநாடு நடந்தது. மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் முன்னிலை வகித்தார். திருப்பூர் எம்பி.,யும், கட்சியின் மாநில துணை செயலாளரான சுப்பராயன், மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ.,வுமான பெரியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர். இந்த மாநாட்டில், திருப்பூர் மாநகரில் வரும் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் ஏற்றுவதற்காக, ஈரோட்டில் இருந்து மறைந்த மூத்த தலைவர்கள் நினைவு ஜோதிகளையும் தொடர் ஓட்டமாக எடுத்து செல்வதென்றும், ஆகஸ்ட் 9ம் தேதி அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நாளில் ‘மக்கள் விரோத மோடி அரசே வெளியேறு’என்ற முழக்கத்துடன் திருப்பூர் மாநகரில் நடைபெறும் மாபெரும் செம்படைப் பேரணியில் ஈரோட்டில் இருந்து ஆயிரம் பேர் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய அரசு உணவு தானிய பொருட்களுக்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை கணிசமாக குறைக்க வேண்டும். தமிழக அரசு சொத்து வரி, மின்சார கட்டண உயா்வை திரும்ப பெற வேண்டும்.