×

மண்டல இணை பதிவாளர் தகவல் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஆக.3: திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மூலம் நடத்தப்படும் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மண்டல இணைப்பதிவாளர் சித்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022-23ம் ஆண்டுக்கான பயிற்சிக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களும், பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி பெறுவதன் மூலம் வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் பணியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். விண்ணப்பிக்க வயது வரம்பாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதிபடி 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவரும் பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சி பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.  மேலும் அஞ்சல் வழி பயிற்சியும் வழங்கப்படும் நிலையில் கூட்டுறவு சங்கங்களில் கூட்டுறவு பட்டய பயிற்சி இல்லாமல் பணியில் சேர்ந்துள்ள சங்க நிரந்தர பணியாளர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
எனவே இந்த முழு நேர பயிற்சிக்கான காலக்கெடு வரும் 18ம்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மேற்படி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இது தொடர்பான மேலும் விபரங்கள் அறிந்திட 9486605009 என்ற கைபேசி எண்ணிலும், 04366_227233 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மண்டல இணை பதிவாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு