வேப்பூர், ஜூலை 30: விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் 35 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வருகிறார். இவர் ஜப்பான் நாட்டில் தமிழ் மொழி பெயர்ப்பாளராகவும் உள்ளார். தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்ட ஜப்பான் மக்கள், சிவன் மற்றும் முருகன் உள்ளிட்ட சாமி வழிபாடு மீது ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் மொழிப்பெயர்ப்பாளர் சுப்பிரமணியம் வழிகாட்டுதலின்பேரில் ஜப்பானை சேர்ந்த தக்காயிகி என்கிற பால கும்ப குருமணி என்பவரின் தலைமையில் 16 ஜப்பானியர்கள் தமிழ்நாட்டில் ஆன்மிக தேடல் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா வந்துள்ளனர்.
இவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார், மதுரை மீனாட்சியம்மன், பழனி முருகன், பாபநாசம் அகத்தியர், சுவாமிமலை உள்ளிட்ட தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நிறைவாக வேப்பூர் அடுத்த நல்லூர் வில்வனேஸ்வரர் கோயிலில், வடதிசை நோக்கி அமைந்துள்ள முருகனை வழிபட வந்தனர். நேற்றுமுன்தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் ஜப்பானிய பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கோயிலுக்கு வந்த ஜப்பானிய பக்தர்களை கோயில் அர்ச்சகர் சாம்பசிவம், திமுக மாவட்ட கவுன்சிலர் சக்திவிநாயகம், வழக்கறிஞர் ரகுநாதன் வரவேற்றனர்.