பள்ளிப்பட்டு, ஜூலை 30: மரம் வளர்ர்போம் மழை பெறுவோம் என்று” என்று மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு நீண்ட காலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. இருப்பினும், மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றனர்.மரங்கள் அழிப்பு அதிகரித்து வருவதால், மழை குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மரம் வளர்ப்பு திட்டத்தில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக வேளாண்மைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை ஆகிய துறைகள் சார்பில் மரம் வளப்பு திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இத் திட்டத்தில் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் முன்னோடியாக திகழ்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்ப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் அம்மையார்குப்பம் ஊராட்சியில் நாற்றுப் பண்ணை திட்டத்தின் கீழ் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பலவிதமாக விதைகள் நட்டு நாற்றாங்கால் அமைத்து செடிகள் வளர்த்து மற்ற ஊராட்சிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. நாற்றுப் பண்ணை திட்டத்திற்காக பந்தல் அமைத்து இலப்பை, வேம்பு, மா,பலா, கொய்யா, முந்திரி, புளி, பூவரசி, முருங்கை, பாதாம், உட்ப்ட 50க்கும் மேற்பட்ட ரகங்கள் விதைகள் நாற்று விட்டு செடிகள் வளர்ந்த பின் அவற்றை சத்து நிறைந்த மண்ணில் நட்டு பல்வேறு கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு 50 ஆயிரம் மரக்கன்றுகள் கிராமங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு வைத்து இதுவரை 10 ஆயிரம் மரக்கன்றுகள் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கிராம பஞ்சாயத்துகளுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை நட்டு ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வளர்த்து வருகின்றது.
பசுமை புரட்சி: வறண்ட ஒன்றியமாக கூறப்படும் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பாலாபுரம், சந்திரவிலாசபுரம், எஸ்.வி.ஜி.புரம், மயிலர்வாடா உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மர்ம் வளர்க்கும் திட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அங்குள்ள மலைப் பகுதிகள், கிராமப் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் மூலம் மரக்கன்றுகள் பராமரித்து பசுமை புரட்சி ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அம்மையார்குப்பம் ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாற்றுப் பண்ணை திட்டத்தை தொடங்கினோம்.
மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஏதுவாக இளைஞர்கள் ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர் பல்வேறு பகுதிகளிலிருந்து தரமான விதைகள் மூலம் நாற்றங்கால் நட்டு செடிகள் வளர்த்து கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க பெண் தொழிலாளர்களுடன் இளைஞர்கள் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்., கிராமத்தை பசுமையாக மாற்றி எதிர்கால தலைமுறைக்கு இயற்கையான காற்று மாசற்ற சுற்றுச்சூழல் வழங்க முடியும் என்று ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.