மானாமதுரை, ஜூலை 30: மானாமதுரை மேல்கரையில் ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆடி மாதங்களில் திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொராேனா பரவல் தீவிரமாக இருந்ததால் திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டுக்கான திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் ஆனந்தவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்னம், மயில், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் காட்சியளிப்பார்.
நாளை காலை 11 மணிக்கு மேல் கொடியேற்றம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும், தொடர்ந்து பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாளில் அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுவார். பத்தாம் நாள் திருவிழாவான கடைசி நாளில் ஆனந்தவல்லியம்மன் தபசு திருக்கோலத்தில் காட்சியளிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் கண்காணிப்பாளர் சீனிவாசன், கோயில் குருக்கள் தெய்வசிகாமணி பட்டர் தலைமையில் செய்து வருகின்றனர்.