திருப்பூர், ஜூலை 30: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 228.60 மிமீ மழை பதிவானது. திருப்பூர் மாவட்டத்தில் சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதுபோல், முக்கியமான நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பெய்த அளவின் விவரம் வருமாறு:திருப்பூர் வடக்கு பகுதியில் 4 மிமீ, பல்லடத்தில் 3 மிமீ, ஊத்துக்குளியில் 14 மிமீ, தாராபுரத்தில் 9 மி.மீ, மூலனூரில் 2 மிமீ, திருமூர்த்தி அணை பகுதியில் 48 மிமீ, அமராவதி அணை பகுதியில் 38 மிமீ, உடுமலையில் 14.30 மிமீ, மடத்துக்குளத்தில் 30 மிமீ, திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதியில் 3 மிமீ, வெள்ளகோவிலில் 2.30 மிமீ, திருமூர்த்தி அணை உள்பகுதியில் 46 மிமீ, அவினாசி ரோட்டில் 4 மிமீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 228.60 மி.மீட்டர் மழை பதிவானது. இதன் சராசரி 13.45 மிமீ ஆகும்.