ஆண்டிமடம், ஜூலை 29: அரியலூர் மாவட்டம் செந்துறை கல்வி மாவட்டம் சார்பாக ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆண்டிமடத்தில் உள்ள சௌபாக்கியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு செந்துறை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் பேபி தலைமை வகித்து தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அவர் கூறியதாவது பள்ளி வளர்ச்சி, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், மாணவர்களின் கற்றல் நிலை மேம்படுத்தல், கற்றல் நோக்கம், குறிக்கோள், கற்றல் அடைவுத் திறனை மாணவர்களிடம் கொண்டு செல்லுதல், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் அவசியம் மாணவர்களின் திறமையை அடையாளம் காணுதல், மேலும் ஆசிரியர்களின் கடமைகள் போன்றவற்றை குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலர்கள் முனியம்மாள், சந்திரலேகா மற்றும் சௌபாக்கியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சண்முகநாதன், பள்ளி முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆண்டிமடம் ஒன்றிய பள்ளித் துணை ஆய்வாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.