×

வீடு முழுக்க குவிந்திருக்கும் வெற்றிக்கோப்பைகள் கபடி மீது தீராத காதல் கொண்ட விமல்ராஜ்

பண்ருட்டி, ஜூலை 28: பண்ருட்டி அடுத்த பெரியபுறங்கனியை சேர்ந்தவர் விமல்ராஜ்(21) கபடி வீரர். இவர் சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 25ம் தேதி மானடிக்குப்பத்தில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பெரியபுறங்கனி கிராம அணி சார்பில் கலந்துகொண்டனர். கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்ட விமல்ராஜ் எதிர்த்து விளையாடும் அணிகளுக்கு சவால் விடும் வகையில் விளையாடுவார். கபடி மீது கொண்ட தீராத ஆர்வத்தால், பல போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகளை வீடு முழுவதும் வாங்கி குவித்துள்ளார். இதே போன்று புறங்கனி அணிக்காக விமல்ராஜ் கலந்து கொண்டு விளையாடும் போது களத்திலே  சுருண்டு விழுந்து இறந்தார். இந்த காட்சி தமிழகம் முழுவதும் அதிர்ச்சி  ஏற்படுத்தியது. தொடர்ந்து விமல்ராஜின் உடலை வெற்றிக்கோப்பையுடன் சக வீரர்கள் கதறியபடி புதைத்தனர்.

இதற்கிடையே தமிழக முதல்வர் கபடி போட்டியில் இறந்து போன விமல்ராஜ் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இதற்கிடையே விமல்ராஜ் இறந்தபோதும் அவர் சார்ந்த அணியே போட்டியில் தற்போது வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த பரிசுக்கான தொகை ரூ.3 லட்சம் மற்றும் கோப்பை ஆகியவற்றை சக கபடி வீரர்கள் கண்ணீர் மல்க நேற்று விமல்ராஜ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். புதுச்சேரி மாநில கபடி சங்கமும் ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.  மேலும் பல்வேறு பகுதியிலிருந்து கபடி கழக நிர்வாகிகள்  சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அவர் போட்டிகளில் கலந்து கொண்டு வென்று வந்த கோப்பைகள் அவரது நினைவுகளை சுமந்தபடி வீட்டில் ஒரு மூலையில் குவிந்து கிடக்கிறது. பண்ருட்டி அடுத்த பெரிய புறங்கனியை சேர்ந்தவர் செல்வம் கூலித்தொழிலாளி, சரியாக பார்வை கிடையாது.  இவரது மனைவி சுந்தரி முந்திரி கொட்டை உடைக்கும் தொழிலாளி. இவரது மகன் விமல்ராஜ், இவரது தங்கை நந்தினி. தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.

இதில் விமல்ராஜ் தான்படித்த புறங்கனி பள்ளியில் கபடி விளையாடி பல பரிசுகளை பெற்றார். பின்னர் மேல்படிப்புக்காக கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தபோது கபடியில் இவரது ஆர்வத்தை கண்டு சேலம் கபடி கழகம் இவரை தத்தெடுத்து சென்றது. இறந்துபோன விமல்ராஜ் கபடி, கபடி என்றுதான் மூச்சு விடுவதை வழக்கமாக வைத்திருந்தாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். தனக்கென சொந்த வாகனம் கூட இல்லாத இவர் தனது வாடஸ்அப்பில் `என் காதலி கபடி, நான் காதலிப்பதும் கபடி’ என ஸ்டேட்டஸ் வைக்கும் அளவுக்கு வெறித்தனமாக கபடியை விமல்ராஜ் நேசித்துள்ளார். சொந்த மாவட்டத்தில் நடைபெறும் கபடி போட்டிக்கு நண்பர்கள் அழைத்ததின் பேரில் விளையாடியபோதுதான் இந்த சோகம் நிகழ்ந்தது. இவரை பெரிந்தும் நம்பியிருந்த இவரது குடும்பம்  தற்போது ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறது.

இது குறித்து அவரது தாயார் சுந்தரி கூறுகையில், எங்கள் குடும்பமே விமல்ராஜை நம்பித்தான் இருந்தோம், மின்சார வசதி கூட இல்லாமல் படித்தான். கழிவறை, குளியலறை வசதி கூட இல்ல. இருப்பினும் கபடி போட்டியின் மீது தீராத ஆர்வம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையாடும்போது எங்களிடம் தெரிவித்துவிட்டுதான் உற்சாகமாக செல்வான். ஆனால் எப்போதும் வெற்றியோடு திரும்பும் விமல்ராஜ், இந்தமுறை சடலமாக திரும்பிவிட்டானே எனக்கூறி கண்ணீர் வடித்தார். தங்கை நந்தினியிடம் கேட்டபோது: எங்களது அண்ணன்தான் எல்லாமே என்று வாழ்ந்தோம். அவரது திடீர் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தற்போதுதான் சிறிய அளவில் வீட்டை கட்டி ஷெட் போட்டு வாழ்ந்து வருகிறோம். எனது குடும்பத்தை காப்பாற்ற தமிழக முதல்வர் அரசு வேலை வழங்கி உதவிட வேண்டுமென கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Vimalraj ,Kabaddi ,
× RELATED மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி