×

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை மருந்து தயாரிக்க கடத்தப்பட்ட 4500 வலி நிவாரணி மாத்திரை பறிமுதல்

தூத்துக்குடி, ஜூலை 27: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப்பொருட்கள், விரளி மஞ்சள், கடல் அட்டை உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள், பீடி இலை போன்றவை கடத்தி செல்லப்பட்டு வருகிறது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து பொருட்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐக்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், ஏட்டுகள் இருதயராஜ்குமார், ராமர் மற்றும் போலீசார் தூத்துக்குடி புறநகர் பகுதி கடற்கரையில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கடற்கரையில் இருந்து ஒரு நாட்டுப்படகில் இருவர் ஏதோ ஒரு பொருளை ஏற்றிக்கொண்டு கடல் வழியாக கொண்டு செல்ல முற்பட்டனர். மேலும் அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். அந்த நாட்டுப்படகில் இருந்து பிரிகேப்ளின் 150 எம்ஜி என்ற மாத்திரைகள் இருந்துள்ளன. 450 அட்டைகளில் இருந்த 4500 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை நரம்பியல் தொடர்பான வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுவது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தல் இல்லாமல் இருந்த மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாத்திரைகளில் விலை உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. உரிய மருந்து சீட்டுகளும் இல்லாத நிலையில், இவை இங்கிருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகள் தயாரிப்பதற்காக கடத்திச் செல்லப்பட இருந்ததும் தெரிவந்துள்ளது.இதனையடுத்து இந்த மாத்திரைகள் மற்றும் நாட்டுப்படகை கியூ பிரிவு போலீசார் சுங்கத்துறையில் ஒப்படைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இதுபோன்று பல ஆயிரக்கணக்கான மாத்திரைகள் கடல் வழியாக இங்கிருந்து ஏற்கனவே கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

Tags : Thoothukudi ,Sri Lanka ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...