×

நூதன மோசடி செய்வதாக எஸ்.பி.யிடம் புகார் மனு

கிருஷ்ணகிரி, ஜூலை 27: கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி. சரோஜ்குமார் தாக்கூரிடம், கிருஷ்ணகிரி தர்கா கமிட்டியினர் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் உள்ள சங்கல்தோப்பு தர்கா, மூன்று ஜமாத்காரர்களின் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் உள்ளது. இங்கு ஜாதி, மத பேதமின்றி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் அனைத்து சமூக மக்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சங்கல்தோப்பு தர்காவிற்கு வரும் பக்தர்களிடம் கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த அன்சர் பாபு, அவரது மனைவி முனீரா(எ) மஸ்தானியம்மாள் மற்றும் அவர்களது மகன் ஆகியோர் பண மோசடியில் ஈடுபடுவதாக கூறி தர்கா நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தாலுகா போலீசில் புகாரளித்துள்ளனர். அதில், உண்டியல் திருட்டு மற்றும் பக்தர்களிடம் குழந்தை பாக்கியம், பில்லிசூனியம், தீயசக்திகளை விரட்டுவது என நூதனமுறையில் பணமோசடி செய்து வருகின்றனர். ஏற்கனவே இவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். இதில் தவுலாதாபாத் சுன்னத் ஜமாத் தலைவர் கவுஸ் ஷெரிப், பூரா மஸ்ஜித் சுன்னத் ஜமாத் பொருளாளர் முனீர், சாஹி மஸ்ஜித் நிர்வாகி அத்தாவுல்லா உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : SP ,Nuthana ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்