×

சென்னையின் 15 மண்டலங்களிலும் கட்டிட கழிவு கொட்டுவதற்கான இடங்களை மாநகராட்சி அறிவிப்பு: மீறினால் அபராதம்

சென்னை, ஜூலை 27: கட்டிட கழிவுகளை கொட்ட சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை மீறி பொது இடங்களில் கெட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை கொண்டுவதற்கு சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். இதை மீறுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019ன்படி அபராதம் விதிக்கப்படும்.

அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் திருவொற்றியூர் சாத்தாங்காடு பக்கிங்ஹாம் கால்வாய் சாலை, மணலி மண்டலத்தில் மணலி காமராஜ் சாலை, மாதவரம் மண்டலத்தில் சி.எம்.டி.ஏ. டிரக் முனையம், இரவு காப்பகம் அருகில், மாதவரம் பேருந்து முனையம் பின்புறம், தண்டையார்பேட்டை மண்டலத்தில் வியாசர்பாடி மகாகவி பாரதி நகர், வடக்கு அவென்யூ சாலை, ராயபுரம் மண்டலத்தில் சூளை அவதான் பாப்பையா சாலையில் உள்ள கால்நடை டிப்போ, திரு.வி.க.நகர் மண்டலத்தில் பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஜமாலியா (பழைய லாரி நிலையம்), அம்பத்தூர் மண்டலத்தில் அம்பத்தூர் மாணிக்கம் பிள்ளை தெரு, அண்ணாநகர் மண்டலத்தில் அண்ணாநகர் முதல் பிரதான சாலை, ஷெனாய் நகர் (கெஜ லட்சுமி காலனி அருகில்) தேனாம்பேட்டை (மாநகராட்சி ஐ.டி.ஐ நிறுவனம் அருகில்) லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கம் மண்டலத்தில் கோடம்பாக்கம் குருசிவா தெரு. எஸ்.எம்.பிளாக், ஜாபர்கான்பேட்டை, வளசரவாக்கம் மண்டலத்தில் நடராஜன் சாலை சந்திப்பு  மற்றும் பாரதி சாலை (ராமாபுரம் ஏரி அருகில்), ஆலந்தூர் மண்டலத்தில் கிருஷ்ணா நகர் பிரதான சாலை, ஒத்தவாடை மயானபூமி அருகில், அடையாறு மண்டலத்தில் வேளச்சேரி மயானபூமி, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக்  கல்லூரி அருகில், பெருங்குடி மண்டலத்தில் பெருங்குடி 200 அடி ரேடியல் சாலை, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் காரப்பாக்கம் கங்கை அம்மன் கோயில் தெரு விரிவு, (தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் அருகில்) ஆகிய 15 இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 20 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக கட்டிடக் கழிவுகளை உருவாக்குபவர்கள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள மறு பயன்பாட்டு மையங்களுக்கு கட்டிடக் கழிவுகளை அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு கட்டிடக் கழிவுகளை அனுப்புவதற்கு முன் உரிய கட்டணத்தை சென்னை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்திய பிறகு கட்டிடக் கழிவுகள் கொட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும்.

  இதை மீறி பொது இடங்களில் ஒரு டன் அளவிற்கு  குறைவான கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு ரூ.2,000ம், அதற்கு மேல்  கொட்டுபவர்களுக்கு ரூ.5,000ம் அபராதம் விதிக்கப்படும்.
 அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.27,37,119 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...