×

பெரியபாளையம் அருகே ஸ்ரீசாய்பாபா கோயிலில் வருடாபிஷேக விழா

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஸ்ரீசாய்பாபா திருக்கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியபாளையம் அருகே  ராள்ளபாடி பகுதி உள்ளது. இங்கு, ஸ்ரீசாய் பாபா திருக்கோயிலின் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர்,  8.30மணி அளவில் யாக வேள்வி தொடக்கம், விநாயகர் வழிபாடு, 108 கலச ஸ்தாபனம் தொடர்ந்து மகா கணபதி ஹோமம், கோபுர மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், 108 தாமரை மலர் மகாலட்சுமி ஹோமம், சாய்பாபா மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 108 கலசங்களை பெண்கள் எடுத்து சென்று கோயிலை சுற்றி வலம் வந்தனர்.  இதனைத்தொடர்ந்து, பாபாவிற்கு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியை தொடர்ந்து மதியம் 12.15 மணி அளவில் பிற்பகல் ஆரத்தி பூஜை நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் ஆரத்தி பாடலை பாடினார்.  பாபாவிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவ சாயி சேவா அறக்கட்டளையினர்  மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Annual Blessing Ceremony ,Srisaibaba Temple ,Periyapalayam ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை...