ஊட்டி, ஜூன் 11: நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், இந்திய அரசியல் அமைப்பு விதிகளின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு இயன்றவை பாடுபடுவேன் என அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்கிற மாதன், தொழிலாளர் நலத்துறை உதவி இயக்குநர் சதீஸ்குமார் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.