×

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் மண்டல இணைப்பதிவாளர் அறிவிப்பு

சிவகங்கை, ஜூன் 8: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பொது நகைக்கடன், வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், குறைந்த வட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், சுய உதவிக்குழு கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்படுகிறது. இதற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், ரேஷன்கார்டு நகல், நிலவுடமை தொடர்பான 10(1) கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் எல்லைக்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று பங்குத்தொகை மற்றும் நுழைவுக்கட்டணமாக ரூ.110ஐ செலுத்தி, உறுப்பினராக சேர்ந்து, உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து கடன்களை பெற்று பயனடையலாம். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு சிவகங்கை மற்றும் திருப்புவனம் வட்ட கள அலுவலரை 73391 29088, காளையார்கோவில் வட்ட களஅலுவலரை 94429 26797, மானாமதுரை களஅலுவலரை 96005 48022, இளையான்குடி வட்ட களஅலுவலரை 97878 04562, கல்லல், தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் வட்ட களஅலுவலரை 95975 08277, எஸ்.புதூர் மற்றும் சிங்கம்புணரி வட்ட களஅலுவலரை 96778 18959, சாக்கோட்டை மற்றும் கண்ணங்குடி வட்ட களஅலுவலரை 91235 52294 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இத்தகவலை சிவகங்கை மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Tags : Zonal Registrar ,
× RELATED விவசாயிகளுக்கு புதிதாக பயிர்க்கடன்: மண்டல இணைப்பதிவாளர் அறிக்கை