களக்காடு: களக்காடு ஜோசப் கல்வியியல் கல்லூரியில் ரூபி மனோகரன் எம்எல்ஏ ஏற்பாட்டின் பேரில் காவல்துறை மற்றும் முப்படை பணிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதை துவக்கிவைத்து, தமிழக சபாநாயகர் அப்பாவு பேசுகையில் ‘‘கடந்த 1996ம் ஆண்டு தமிழக முதல்வராக கலைஞர் பதவியேற்ற போது, தகவல் தொழில்நுட்பம், கனணியில் பொதுமக்களுக்கு புரிதல் இல்லாமல் இருந்தது. தகவல் தொழில்நுட்பத்தை நமது இளைஞர்களுக்கு, இளம்பெண்களுக்கு, நமது சமுதாயத்தினர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் கருணாநிதி சென்னையில் டைட்டல் பார்க்கை துவக்கினார். தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குவதற்கும், அத்துறையில் பல லட்சம் பேர் வேலை பார்ப்பதற்கும் காரணமாக திகழ்ந்தவர் கலைஞர் ஆவார்” என்றார். முகாமில் களக்காடு யூனியன் சேர்மன் இந்திரா ஜார்ஜ்கோசல், மாவட்ட திமுக துணைச்செயலாளர் சித்திக், செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ரூபி மனோகரன் சாரிட்டேபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.