×

பிரெஞ்சு சட்டமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க புதுச்சேரியில் வாக்களித்த பிரான்ஸ் குடியுரிமைவாசிகள்

புதுச்சேரி, ஜூன் 6: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முதல் சுற்று தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், கடந்த ஏப்ரல் 10 மற்றும் 24ம் தேதிகளில் நடந்த பிரான்சு நாட்டின் குடியரசு தலைவருக்கான தேர்தல்களில் பங்கேற்று வாக்களித்தனர். இதனை தொடர்ந்து, தற்போது பிரான்ஸ் அரசு பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற குடிமக்கள் தங்கள் சட்டமன்ற பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்குகிறது.

இந்த வகையில் கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 4,463 பிரெஞ்சு குடிமக்கள் தங்கள் சட்டமன்ற பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பகுதிகளை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், தங்களது வாக்கை வாக்குப்பெட்டியில் நேரடியாகவோ, ப்ராக்ஸி மூலமாகவோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது இணையவழி மூலமாகவோ ஜூன் 5ம்தேதி முதல் சுற்றிலும் அதனை தொடர்ந்து ஜூன் 19ம் தேதி 2ம் சுற்றிலும் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று, முதல் சுற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்காக புதுச்சேரியில் 2 மையங்கள், சென்னை மற்றும் காரைக்காலில் தலா ஒரு மையம் என 4 இடங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 6 தனித்தனி வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டன. இவற்றில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நேற்று நடந்த முதல் சுற்று தேர்தலில் 8 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணைத்தூதரகத்தில் நடந்த வாக்குப்பதிவில் புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் குடியுரிமைவாசிகள் வரிசையாக நின்று தங்கள் அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்தனர். அதற்கான ஏற்பாடுகளை தூதரக அதிகாரிகள் செய்திருந்தனர். இதையடுத்து வரும் 19ம் தேதி 2வது சுற்று வாக்குப்பதிவு நடக்கிறது.

Tags : Pondicherry ,French ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...