பழநி: பழநி அருகே, தூய்மை நகருக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணியை ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார். பின்னர் தூய்மை நகருக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சியில், தூய்மை நகருக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சித் தலைவர் மேனகா ஆனந்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுதாமணி கார்த்திகேயன், பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். இதை தொடர்ந்து நகரை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாக உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் சுவாமிநாதன், சௌந்திரபாண்டியன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் வாசுகி சிவஞானம், ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் கண்ணன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சோ.காளிமுத்து, பேரூர் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட விவசாய அணி நிர்வாகி மகேந்திரன், ஒன்றிய பிரதிநிதி ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி மயில்சாமி, பேரூர் நிர்வாகி மருதமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.