கரூர், ஜூன் 6: கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிராமத்தை நோக்கி காவல்துறை என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் அனைத்து போலீசார்களும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலம்மாள்புரம் பகுதியில் கிராமத்தை நோக்கி காவல்துறை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏடிஎஸ்பி சைபர் க்ரைம் உட்பட அனைத்து போலீசார்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது, காவல்துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமண தடுப்புச் சட்டம் என்பது குறித்து தெரிவித்ததோடு, 1098 என்ற எண் மூலமும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், இணையவழி மூலம் தனி நபர் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்பவர்களை சட்டப்படி தண்டிக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள 1930 என்ற எண்ணிற்கு உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் எனவும், காவல்துறை உதவிக்கு அவசர அழைப்பு எண்களான 100, 112 பயன்பாடு குறித்தும் தெரிவிக்கப்பட்டது.