×

ஓசூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ₹5 லட்சம், 20 பவுன் கொள்ளை

ஓசூர், ஜூன் 3:  ஓசூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ₹5 லட்சம் ரொக்கம் மற்றும் 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே காரப்பள்ளி பகுதியில் மணிபத்ர லே-அவுட்டில் வசித்து வருபவர் சிவராஜ். காய்கறி மொத்த வியாபாரியான இவரது மனைவி ஜெயம்மா(43). நேற்று காலை சிவராஜ் வழக்கம்போல் கடைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து, ஜெயம்மா வீட்டை பூட்டி விட்டு, அதே பகுதியில் வசித்து வரும் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கிருந்து மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ₹5 லட்சம் ரொக்கம் மற்றும் 20 பவுன் தங்க நகைகள் காணாதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு, மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து ₹5 லட்சம் பணம் மற்றும் 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு