கும்பகோணம், ஜூன் 2: தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா காந்தபுனேனி உத்தரவின் பேரில், திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன் அறிவுரையின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாண்டிச்சேரி சாராயம், மணல் திருட்டு, கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பந்தநல்லூர் காவல்நிலைய சரகம், புழுதிகுடி கிராமத்தில் பாண்டிச்சேரி சாராயம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புழுதிகுடியை சேர்ந்த செல்வராஜ் மகன் சரண்ராஜ்(29), சரண்ராஜின் தாயார் விஜயா(60) ஆகியோர் இவர்களது வீட்டிற்கு பின்புறம் பாண்டிச்சேரி சாராயம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் மப்டியில் சென்று சோதனையிட்டனர். அப்போது போலீசாரை கண்டவுடன் ஓட முயன்ற சரண்ராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இதில் அவரது தாயார் விஜயா, போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த சோதனையில் சரண்ராஜிடமிருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல பல்வேறு வழக்குகள் சரண்ராஜ் மீது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சரண்ராஜை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.