பந்தலூர்: பந்தலூர் அருகே அத்திமாநகர் பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு நகராட்சி சார்பில் பூமி பூஜை போடப்பட்டது. பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு அத்திமாநகர் பகுதியில் நீரோடையின் குறுக்கே தடுப்பணை கட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.அதன்படி நெல்லியாளம் நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கோரப்பட்டு நேற்று தடுப்பணை கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளரும், நகர் மன்ற உறுப்பினருமான சேகர், 11-வது வார்டு உறுப்பினர் ஆலன், ஒப்பந்ததாரர் மூர்த்தி, திமுக நிர்வாகிகள் சிவா, ரமேஷ், நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.