கிருஷ்ணகிரி, மே 27: ஆந்திராவில் இருந்து சூளகிரிக்கு ₹1.50 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திரா மாநிலத்தில் இருந்து சூளகிரிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, பேரிகை எஸ்ஐ ஆனந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் போலீசாருடன், ராமன்தொட்டி பகுதியில் ேராந்து மேற்கொண்டார். அப்போது சந்தேகப்படும் படியாக பையுடன் நின்றிருந்த 3 பேரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் அத்திமுகம் பகுதியை சேர்ந்த சையது மோதீன் (24), எலசட்டியை சேர்ந்த வேணுகோபால்(23), புக்கசாகரம் பகுதியை சேர்ந்த பால்ராஜ்(23) என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து சூளகிரிக்கு பேரிகை வழியாக கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ₹1.50 லட்சம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.