திருப்பரங்குன்றம், மே 27: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.18 லட்சம் வசூலாகியிருந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் கோயில் துணை ஆணையர் சுரேஷ், அழகர்கோவில் துணை ஆணையர் ராமசாமி, மீனாட்சி அம்மன் கோயில் கண்காணிப்பாளர் மாலதி, குன்றத்து கோயில் கண்காணிப்பாளர்கள் பாலலெட்சுமி, சுமதி உள்ளிட்ட அலுவலர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் வேத பாடசாலை மாணவர்கள் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் மாலை வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.18 லட்சத்து 77 ஆயிரத்து 578 ரூபாய் ரொக்கம், 130 கிராம் தங்கம், 1 கிலோ 580 கிராம் வெள்ளி காணிக்கையாக இருந்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.