மானாமதுரை, மே 27: மானாமதுரையை சுற்றியுள்ள மாசிலாமணிபுரம், சந்தனூர்காரைக்குடி, நல்லாண்டிபுரம், குடியிருப்பு, வண்ணானோடை, சந்தனூர்சாலை, கழுங்குத்துறை, ஆலம்பச்சேரி விலக்கு தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக மானாமதுரை வந்து செல்கின்றனர்.இந்த கிராம மக்கள் பயணிகள் நிழற்குடைகளில் காத்திருந்து செல்வது வழக்கம். நல்லாண்டிபுரம், கழுங்குத்துறையில் பயணிகளுக்காக கட்டப்பட்ட நிழற்குடைகள் பராமரிப்பின்றி இடியும் தருவாயில் உள்ளன. இதனால் பயணிகள் இந்த நிழற்குடைகளில் அமராமல் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தபடியும் உள்ளனர். எனவே இவைகளை அகற்றிவிட்டு புதிய பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சாமுவேல் கூறுகையில், ‘இங்குள்ள நிழற்குடைகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. கான்கிரீட் மேற்கூரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உயிரிழப்பு ஏற்படும் முன்பு இப்பயணிகள் நிழற்குடைகளை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.