சிவகங்கை, மே 27:சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளையொட்டி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சிவகங்கை மாவட்ட அளவில் அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடை பெற உள்ளது. ஜூன் 3 அன்று சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசுக் கலைக்கல்லூரியில் காலை 9.30 மணியளவில் போட்டி நடைபெறும். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் (கலைக்கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், செவிலியர் பயிற்சி கல்லூரிகள், தொழிற் பயிற்சி நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகள்) பயிலும் மாணவ, மாணவியர் இப்பேச்சு போட்டியில் பங்கேற்கலாம்.
ஒரு கல்லூரியிலிருந்து இருவர் மட்டுமே பங்கேற்க முடியும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.