×

திருக்காம்புலியூர் கிராமத்தில் ஊட்டசத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறியும் முகாம்

கரூர், மே 26: கரூர் மாநகராட்சி திருக்காம்புலியூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவது குறித்த சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆய்வு குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: தமிழக முதல்வர் மே 21ம்தேதி அன்று ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிவது குறித்து சிறப்பு முகாமினை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் துவக்கி வைத்தார். இதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. இந்த முகாம் 3 பேர்களில் ஒரு மருத்துவர் கொண்ட 16 குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது.

முகாமை பொறுத்தவரை குழந்தைகள் வயதுக்கு ஏற்ப எடை, உயரம் மற்றும் ஊட்டசத்து குறைபாடுகள் கண்டறியப்படும். அவ்வாறு கண்டறியப்பட்ட குழந்தைகளை ஊட்டசத்தினால் குறைபாடா? அல்லது வேறு ஏதாவது மருத்துவ காரணங்களால் குறைபாடு என்பதை கண்டறியப்பட்டு மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும். அவ்வாறு கண்டறியப்பட்ட ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து தலைமை இடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முகாம் ஜூன் 21ம்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறும். மேலும், குழந்தைகளை ஆய்வு மேற்கொள்ளும்போது அவர்களின் தாயார் ஆய்வு மேற்கொள்ளும் இடத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்றார். இந்த நிகழ்வில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சந்தோஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி, பள்ளி சிறார்களின் உடல் நலம் காணும் மருத்துவ அலுவலர் சுரேந்திரன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags : Thirukambuliyur ,
× RELATED திருக்காம்புலியூர் வழியாக செல்லும்...