×

விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

விருத்தாசலம், மே 26: விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்தூர்பேட்டை, கம்மாபுரம், திட்டக்குடி, வேப்பூர், தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில், விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் வந்து செல்கின்றனர். நேற்று காலை கல்லூரியை முடித்து விட்டு சென்ற சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அரசு பேருந்தில் ஏறிச் சென்றனர். பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்ற பேருந்தை ஆலடி சாலை பிரியும் இடத்தில் உள்ள ஒரு ஓட்டல் அருகே பேருந்தை நிறுத்திவிட்டு, பேருந்து ஓட்டுனர் ஓட்டலுக்குள் சாப்பிட சென்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் பேருந்து ஓட்டுனர் வராததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தினர். போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Vriddhachalam ,
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு