×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றும் கல்குவாரி கிரசர்கள் மீது நடவடிக்கை: கலெக்டரிடம் கோரிக்கை

காஞ்சிபுரம்: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், கலெக்டர் ஆர்த்தியிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தீனன் தலைமையில் தமிழக கனரக லாரி உரிமையாளர்கள் சங்கம், மெட்ராஸ் லாரி ஓனர் அசோசியேட் ஆகிய சங்கங்கள் இணைந்து விபத்தில்லா தமிழகம் உருவாக்குவோம் என்ற திட்டம் வெற்றியடைய 6 மாதமாக லாரிகளில் எந்த கனிம பொருள்களையும் அதிகளவில் ஏற்றுவதில்லை என முடிவு செய்தனர். அரசு விதிக்கு உட்பட்டு கனிம லோடுகளை ஏற்றி தொழில் செய்கின்றனர். இதையொட்டி, சுமார் 80 சதவீத டிப்பர் லாரிகளில் உயர்த்தி இருந்த ரீப்பர்களை அகற்றினர்.

அதில் 20 சதவீத லாரிகளில் ரீப்பர்களை அகற்றாமல் பகல் நேரங்களில் 10 டன், இரவு நேரங்களில் 32 டன் வரை அதிக பாரம் ஏற்றப்படுகிறது. இதனால் அதிக விபத்துகளும் உயிர் சேதமும் ஏற்படுகிறது. அதிக பாரம் ஏற்றுவதால் ஏற்படும் விபத்துகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்குவதில்லை. குறிப்பாக, சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைவது மட்டுமின்றி புகை ஏற்பட்டு, சாலை பெயர்ந்து, காற்று தூசு மாசடைவதும் மக்களுக்கு பிரச்னையாக உள்ளது. எனவே கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், கனிமவளத் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், சட்டத்துக்கு புறம்பாக அதிக பாரம்  ஏற்றும் லாரிகளுக்கு லோடு வழங்காமலும், அதிக பாரம் ஏற்றும் கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Kanchipuram district ,
× RELATED குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த...