×

பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேடை ஒன்றியம் எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று துவக்கி வைத்தார். தனியார் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழா நிகச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சத்திய நாராயணராஜ் முன்னிலை வகித்தார்.  வேளாண்மை துறை துணை இயக்குநரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருமான எபிநேசன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், அரக்கோணம் எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து திட்டத்தின் மூலம் 250 விவசாயிகளுக்கு ₹13.87 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கினர்.

முன்னதாக, வேளாண்மை துறை தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்பொருள் காட்சியை பார்வையிட்டனர். இதில் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதி, ஒன்றிய செயலாளர்கள் பி.பழனி, சி.என்.சண்முகம், ஒன்றிய குழு துணை தலைவர்  திலகவதி ரமேஷ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மா.ரகு, ஒன்றிய கவுன்சிலர் செல்வி சந்தோஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊத்துக்கோட்டை: கன்னிகைபேர் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை துவக்க விழா நேற்று நடந்தது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கன்னிகைபேர் நிகழ்வில், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மேனகா சுப்பிரமணி கடன் கூட்டுறவு வங்கி செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில், எல்லாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் சத்தியவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, எல்லாபுரம் ஒன்றிய துணை வேளாண்மை அலுவலர் ஏ.சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில், 95 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள், 5 பயனாளிகளுக்கு கைதெளிப்பான், விசைதெளிப்பான், 5 பேருக்கு வரப்போர உளுந்து பயிறு, 125 பேருக்கு காய்கறி விதைகள், 50 பேருக்கு பழ மரங்கள், ஒருவருக்கு டிரம் ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் வின்சி, உதவி விதை அலுவலர் சிவகுமார், உதவி வேளாண் அலுவலர் அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். கன்னிகைப்பேர் ஊராட்சி செயலாளர் பொன்னரசு நன்றி கூறினார்.

Tags : Chief Minister ,MK Stalin ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...