×

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று நடக்கிறது

ஈரோடு,மே21: ஈரோடு மாவட்டத்தில் இன்று(21ம் தேதி)குரூப் 2 தேர்வு 117 மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 35 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று(21ம் தேதி) நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப்2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு, 21ம் தேதி காலை நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் 117 தேர்வு  மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வில் பங்கேற்போர் காலை, 8:30 மணி முதல், 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9 மணிக்கு மேல் வருவோர், அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2, 2ஏ (நேர்முக தேர்வு பதவிகள் மற்றும் நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வில் 35 ஆயிரத்து 619 பேர் பங்கேற்கின்றனர்.

ஒரு தேர்வு கூடத்தில் 400 பேர் தேர்வு எழுதுவர். தேர்வை கண்காணிக்க 8 பறக்கும் படை அலுவலர்கள், 29 நடமாடும் குழு, 120 ஒளிப்பதிவாளர்கள், 234 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். மாவட்ட போலீஸ் மூலம், ஈரோடு மாவட்ட கருவூலத்தில் வினாத்தாள், விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் உதவியுடன் வினாத்தாள், விடைத்தாள் நடமாடும் குழு வாகனங்களில் எடுத்து செல்லப்படும். தேர்வு கூடங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழக பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தடையற்ற மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு பேசினார்.

Tags : DNPSC ,
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்