×

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

காஞ்சிபுரம், மே 21: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் மற்றும் வாணிப கழகம் சார்பில்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் எடுத்தல் மற்றும் அரிசி ஒப்படைக்கும் இடத்தில் கால தாமதம் ஆவது, போக்குவரத்து வாகனங்களின் செலவு பெருமளவு பாதிக்கப்படுவது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தரமான நெல்களை அரசு அலுவலர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என அரவை முகவர்கள் தெரிவித்தனர்.

அதற்கு, வட்டார போக்குவரத்து அலுவலருடன் இணைந்து வாகன பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அரவை கட்டணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். மேலும் தற்போது, ஒரு சில அரவை முகவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல் எடுக்காமல் உள்ளவர்கள், நெல் எடுத்து அரைக்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் அரவை முகவர்களாக செயல்பட்டு மாவட்டத்தில் விளைந்த நெல்லினை, முகவர்கள் மூலம் அரைத்து பொது விநியோகத் திட்டத்துக்கு பயன்படுத்துவதுடன் விவசாயிகள் முழுமையாக பயன்பெற ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் வே.ராஜாராமன், கலெக்டர் ஆர்த்தி, எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இணை நிர்வாக இயக்குநர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanchipuram ,Minister ,Thamo Anparasan ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...