திருச்சி, மே 20:பணி நிரந்தரத்திற்கு ரூ.4 லட்சம் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். திருச்சி பாலக்கரை பருப்புக்காரத் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (25). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கிடையே கடந்த 3 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தை அடுத்து 2 நாட்கள் மட்டும் திண்டுக்கல்லில் வசித்த தம்பதி அதன் பின், கோயம்புத்தூரில் வசித்தனர். இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ்சில் லேப் டெக்னீசியனாக உள்ள பாலமுருகன் தன்னை பணி நிரந்தரம் செய்ய ரூ.4 லட்சம் தேவைப்படுவதாக கூறினார்.
இதில், தாய் வீட்டில் இருந்து ரூ.4 லட்சம் வாங்கி வருமாறு மாமனார் மாமியார் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் லட்சுமியை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வரதட்சணை கேட்டு துன்புறுத்தும் கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் லட்சுமி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, விசாரித்து நடவடிக்கை எடுக்க கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். உத்தரவை அடுத்து கணவர் பாலமுருகன், மாமியார் பஞ்சவர்ணம், மாமனார் சிவசாமி, கணவரின் அக்கா பாண்டியம்மாள், இவரது கணவர் பால்பாண்டி என 5 பேர் மீது மகளிர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.