ஊட்டி, மே 19: நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் வனத்தை ஒட்டியும், அருகாமையிலும் அமைந்துள்ளன. வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப வனப்பரப்பு இல்லாத நிலையில், வனத்தை ஒட்டிய பகுதிகளில் அதிகரிக்கும் கட்டுமானம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணகளால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. குறிப்பாக சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகிறது. இந்நிலையில், ஊட்டி - மஞ்சூர் சாலையில் கொடலட்டி சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் கரடி ஒன்று சாவகாசமாக சாலையில் உலா வந்தது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டி வீடியோ எடுத்தார். சிறிது நேரம் சாலையில் உலா வந்த அந்த கரடி, சாலையோர வனத்திற்குள் சென்று மறைந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.