மதுரை, மே 18: மதுரை மாநகராட்சி மத்திய மண்டல (எண்.3) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை வகிக்க, துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிசெல்வி முன்னிலை வகித்தனர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடந்த குறைதீர் கூட்டத்தில் பெயர் மாற்றம், சொத்துவரி தொடர்பாக 22 மனுக்கள், பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் அடைப்பு தொடர்பாக 20 மனுக்கள், குடிநீர் இணைப்பு மற்றும் பழுதுகள், சாலை வசதி வேண்டி தொடர்பாக 14 மனுக்கள், கடைகள் ஒதுக்கீடு வேண்டி 6 மனுக்கள் என மொத்தம் 70 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற மேயர், அவற்றை கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். இம்முகாமில் உதவி ஆணையாளர் மனோகரன், செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புத்தாய், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிசெயற்ப்பொறியாளர்கள் கனி, அய்யப்பன், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் கவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.