×

திருக்கனூர் அருகே சாமி ஊர்வலம் வரவேண்டி கிராம மக்கள் திடீர் மறியல்

திருக்கனூர், மே 18:   புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே கே.மணவெளி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவான சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோயில் நிர்வாகத்தினர் மாடவீதி வழியாக சுவாமி வீதி உலா வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். அதனை அடுத்து புதுநகரைச் சேர்ந்த மக்கள் எங்கள் பகுதிக்கும் சுவாமி வீதிஉலா வரவேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதை கோயில் நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று முன்தினம் திருக்கனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தையில் சுவாமி வரவில்லை என்றாலும் கரகத்தின் மூலம் தீபாராதனை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கோயில் விழாவுக்கு உண்டான தொகையை நாங்கள் செலுத்துகிறோம், ஏன் எங்கள் பகுதிக்கு சுவாமி வரக்கூடாது? என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து நேற்று காலை புதுநகர் பகுதி மக்கள் சுவாமி வீதி உலா எங்கள் பகுதிக்கும் வரவேண்டுமென கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரத்தில் இருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்லும் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags : Sami ,Thirukkanur ,
× RELATED மன்னார்குடி அருகே காளியம்மன்...