சென்னை: சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைப்பது குறித்து மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு நகர்ப்புற மருத்துவ நிலையங்களும் ₹35.45 லட்சம் மதிப்பில் அமைய உள்ளது. சென்னையில் 200 இடங்களில் இந்த நகர்புற மருத்துவ நிலையங்கள் மிக விரைவில் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சியில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ₹588 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.