×

நைட்டிங்கேல் பிறந்தநாளையொட்டி தமிழில் உறுதிமொழி எடுத்த செவிலியர்கள்

மதுரை, மே 13: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் 202ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழில் உறுதிமொழியை மதுரையில் செவிலியர்கள் எடுத்துக்கொண்டனர். பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில் சர்வதேச செவிலியர் தினமாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை உலக நர்சுகள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சர்வதேச செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு நர்சுகள் சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் திலகவதி ஜெயராஜ் தலைமையில் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள நர்சுகள் விடுதி வளாகம் முன்பாக, பிளாரன்சு நைட்டிங்கேல் சிலை முன்பு நர்சுகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதாவது, ‘என் வாழ்க்கையைத் தூய்மையாக நடத்தி, என் பணியை செவ்வனே செய்வேன் என்று கடவுளுக்கு முன், இக்கூட்டத்தின் முன் உறுதி கூறுகிறேன். தீமை பயப்பவை எவையும் நான் தொடேன். தீமை தரும் எம்மருந்தையும் உட்கொள்ளேன், அறிந்து அவ்வகையில் எதையும்பிறருக்கும் கொடேன். என் பணி சிறக்க என்னாலானவற்றைச் செய்வேன். என் சேவை துறையில் என்னிடம் ஒப்புவித்த விஷயங்களையும் நான் அறியும் மற்றவரின் சொந்த குடும்ப விஷயங்களையும் வெளியிடேன். உதவவும், என் மருத்துவருக்கு அவர் சேவையில் கவனிப்பில் இருப்போரின் நலத்திற்காக அன்புடன், உண்மையுடன் உழைக்க என்னை அர்ப்பணம் செய்கிறேன்’ என தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : Nightingale ,
× RELATED சென்னை திருமுல்லைவாயலில் குறவர்...