பீளமேடு, மே 13: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தார். அவர் வந்த விமானம் 25 நிமிடங்கள் தாமதமாக 2.40க்கு வந்தது. அவரை மாவட்ட கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின்னர் அவர் கார் மூலம் மதியம் 3 மணிக்கு பாரதியார் பல்கலைக்கழகம் புறப்பட்டு சென்றார்.கவர்னர் கோவை வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவை அவினாசி சாலையிலிருந்து விமான நிலையம் வரை உள்ள பிரதான சாலை மற்றும் சேவை சாலையோரம் இரு சக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனத்தையும் நிறுத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதே போல விமான நிலையத்திலிருந்து பாரதியார் பல்கலைக்கழகம் வரை உள்ள சாலையின் இரண்டு பக்கமும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். இதில் துணை வேந்தர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.