×

கூத்தாநல்லூர் நகராட்சி பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிராக வன்முறை மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்


மன்னார்குடி, மே 12: கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நகர அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் உத்தரவின்பேரில் நடைபெற்றது. திருவாரூர் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கூத்தாநல்லூர் நகரத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புகுழு நகர்மன்ற தலைவர், ஆணையர் உள்ளிட்ட 18 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தலைமை வகித்து நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா பேசுகையில், குழந்தை திருமணங்கள், குழந்தை தொழிலாளர், சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து வாங்குதல், குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து நகரத்தில் விழிப்புணர்வு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குழந்தைகளின் எதிர்கால நன்மைகள் கருதி இக்குழு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் போதிய ஒத்துழைப்பு வழங்குவதுடன், உங்கள் பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் வன்முறைகள் நடந்தால் அதுகுறித்து எங்களுக்கு உரிய தகவல் வழங்க வேண்டும் என்றார். சமூக பணியாளர் மணிமாறன், குழு உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பேசினர்.

Tags : Koothanallur ,
× RELATED மதுபோதையில் தகராறு செய்ததால் மகனை அடித்துக்கொன்ற தந்தை