×

நெல்லையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வாழ்க்கையில் செல்லக்கூடாத 2 இடங்கள் எவை?

நெல்லை, மே 12: நெல்லை  வண்ணார்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் மத்திய அரசின் தூய்மை  இந்தியா இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி மரக்கன்று நடுதல், சுகாதார பணிகள் மேம்படுத்துதல், கருத்தரங்கு  உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று (புதன்) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர்  சீனிவாசன் தலைமை வகித்தார். துணை  மருத்துவ கண்காணிப்பாளர் சிவகுமார்  வரவேற்றார். கண் மருத்துவ பிரிவு தலைவர்  டாக்டர் குணசேகர் முன்னிலை  வகித்தார்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார்  பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவமனை  வளாகத்தை பார்வையிட்ட அவர் பேசியதாவது: நான் ஏற்கனவே சில  ஆண்டுகளுக்கு முன்னர் தென்காசியில் பணிபுரிந்துள்ளேன். அந்த காலங்களில்  நெல்லை, தென்காசியில் மருத்துவ வசதிகள் குறைவாக இருந்தன. தற்போது  இங்கு மருத்துவ வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை இஎஸ்ஐ  மருத்துவமனையில் மட்டும் 100 படுக்கை வசதிகள் உள்ளன. இதனை மேலும்  விரிவுபடுத்தப்பட உள்ளதாக  தெரிவித்தனர். இது வரவேற்கதக்கது என்றாலும்   வாழ்க்கையில் நாம் செல்லக்கூடாத இடங்கள் 2 உள்ளன. ஒன்று  காவல்நிலையம் மற்றொன்று மருத்துவமனை. இந்த இரண்டு இடங்களுக்கும் செல்லாமல்  இருந்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இங்கு வந்துள்ள நீங்கள்  இனியும் வரவேண்டாம் என்ற எண்ணத்தோடு  அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்  என்றார். நிகழ்ச்சியில் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள், நோயாளிகள்  மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இன்று நிறைவு  நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Tags : Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!