பழநி, மே 11: மேற்கு தொடர்ச்சி மலையில் பழநியிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது கொடைக்கானல். கோடை விடுமுறை நெருங்கி உள்ளதால் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் பழநி சாலை வழியாகவே செல்கின்றனர். இவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி போடும் பிளாஸ்டிக் பைகளால் கொடைக்கானல் மலையின் இயற்கைத்துவம் மாறும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் பயன் ஏதுமில்லை. இதை தொடர்ந்து வனப்பகுதியை காக்க பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பழநி- கொடைக்கானல் சாலையில் பால்பண்ணை அருகில் சுற்றுலா பயணிகள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பைகளை பெற்று கொண்டு, துணிப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சித்த மருத்துவர் டாக்டர்.மகேந்திரன் தலைமையிலான தன்னார்வலர் குழுவினர் மூலம் செம்மொழி தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் கடந்த 1 வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.