×

காரைக்காலில் பொறியியல் கல்லூரியில் திருடிய வாலிபர் கைது

காரைக்கால்,மே 11: காரைக்கால் அடுத்த மண்டபத்தூர் பகுதியில் பாரதியார் பொறியியல் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் விடுமுறை நாட்கள் என்பதால் கல்லூரி மூடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் பட்டப்பகலில் கல்லூரி மெக்கானிக்கல் துறை ஆய்வகத்தின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிலர் உள்ளே இருந்த வெல்டிங் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள், இரும்பு ராடுகள் மற்றும் காப்பர் உள்ளிட்ட ரூ.35,000 மதிப்பிலான பொருட்களை திருடி செல்வதை கல்லூரி ஊழியர் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த ஊழியர் கூச்சலிட்ட உடனே அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களும், ஊழியர்களும் திருடர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார். இருவர் தப்பி சென்றனர். பின்னர் பிடிபட்ட நபர் மற்றும் திருடப்பட்ட பொருட்களை பொதுமக்கள் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில் ராம்கி(35) என்றும் சிதம்பரத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கோட்டுச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ராம்கி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சுந்தரம் மற்றும் கார்த்தி என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...