×

மியாவாக்கி அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணி

கம்பம், மே 10: கம்பம் நகராட்சியில் ‘மியாவாக்கி’ நகர்ப்புற காடு அமைக்கும் திட்டத்தை நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் பசுமைவெளி பரப்பை அதிகரிக்க ‘மியாவாக்கி’ என்னும் அடர்வனக் காடுகளை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, கம்பத்தில் உள்ள பிந்து லேஅவுட் பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், முதற்கட்டமாக 200 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்து, முதல் மரக்கன்றை நட்டு வைத்தார். இதையடுத்து அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுந்தர்ராஜன், திமுக நகர செயலாளர் (வடக்கு) வக்கீல் துரைநெப்போலியன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...