உடன்குடி, மே 10: உடன்குடி அருகேயுள்ள தாங்கைகுளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டுமென விவசாயிகள், விவசாய சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர். மனுவில் கூறியிருப்பதாவது: உடன்குடி யூனியனுக்குட்பட்ட வெங்கட்ராமானுஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள தாங்கைகுளம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தில் தற்போது தண்ணீர் வற்றிய நிலையில் குளத்தை உடைமரங்கள், காட்டுச்செடிகள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. இதனால் வரும் காலங்களில் பருவமழை பொழியும்போது மழை வெள்ளநீரை அதில் முழுமையாக சேமிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மழை வெள்ளநீரை சேமித்து வைக்கவும், வறட்சி நீங்கி நிலத்தடி நீராதாரம் பெருகும் வகையில் குளத்தை நன்றாக ஆழப்படுத்தி, சுத்தப்படுத்தி, கரைகளை உயர்த்தி, பலப்படுத்தி சீரமைக்க வேண்டும். மேலும் குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள காட்டுச்செடிகளை அப்புறப்படுத்தி, கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும். வரும் மழை காலங்களுக்கு முன்பு இப்பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.